செய்திகள்
சேலத்தில் சிறுமியை கடத்திய தொழிலாளி கைது
சேலத்தில் சிறுமியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் 17 வயது உடைய தனது மகளை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவபாலன் (வயது 21) என்பவர் கடத்திச் சென்று விட்டார். எனவே மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் சிவபாலன் சிறுமியுடன் நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். அப்போது போலீசார் விசாரித்தபோது பெண்ணுக்கு 18 வயது ஆகி உள்ளது. எனவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் என்று கூறினார். ஆனால் சிறுமிக்கு 18 வயது ஆக 2 நாட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி பெற்றோரிடம் செல்ல மறுத்தார். இதையடுத்து அவளை அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.