செய்திகள்
கோப்புபடம்

குமரியில், நாளை முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர் போராட்டம்

Published On 2020-12-04 13:44 GMT   |   Update On 2020-12-04 13:44 GMT
குமரியில் நாளை முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில்:

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டத்தை ஆதரித்து இடதுசாரிகள் கூட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அகமது உசேன், தங்கமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, மாநகர செயலாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து குமரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், நாளை காலை 10 மணிக்கு நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலமும், தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டமும் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News