செய்திகள்
கோப்புபடம்

மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் வேலை கிடைக்காததால் பட்டதாரி தற்கொலை

Published On 2020-12-04 13:19 GMT   |   Update On 2020-12-04 13:19 GMT
மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே கடமக்கோட்டில் வெங்கனாம்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவன் குட்டி (வயது 49), இவருக்கு ஆஷா (45) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. ஆசிரியர் பணிக்காக படித்திருந்த சிவன் குட்டிக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வேலை தேடி மாலத்தீவுக்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களில் முயற்சி செய்தும் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து சிவன் குட்டி மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். பின்னர் வேலை தேடி பல்வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ளார். எனினும் அவருக்கு பணி எதுவும் அமையவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவர் அவதிப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு கடன் தொல்லையும் இருந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த சிவன் குட்டி சம்பவத்தன்று ரப்பர் பாலை உறைய வைப்பதற்காக வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிவன் குட்டி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரியான சிவன் குட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News