செய்திகள்
தக்கலை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
தக்கலை அருகே முகநூலில் பழகி பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 22). இவருக்கும் தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்தனர். இதனால், அவர்களது நட்பு நெருக்கமானது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி வீட்டின் அருகே சென்றார். அங்கிருந்து அவர் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி மாணவியை வரவழைத்துள்ளார்.
பின்னர், மாணவியை ஷாஜி வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி பேச்சிப்பாறையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஷாஜி, மாணவியை மீண்டும் அவருடைய வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
இதுபற்றி அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதார். அதைகேட்டு மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா, ஷாஜி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார். வாலிபர் முகநூலில் நட்பாக பழகி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.