செய்திகள்
திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- 3 புரோக்கர்கள் கைது
திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து வட மாநில அழகிகள் 2 பேரை போலீசார் மீட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் காந்திநகர் அன்னபூரணி லே அவுட் பகுதியில் ஒரு வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த தலா 25 வயது மதிக்கத்தக்க கொல்கத்தாவை சேர்ந்த 2 அழகிகளை போலீசார் மீட்டனர். மேலும் வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த கலையரசன் (வயது 20), ஜெகன் (22) மற்றும் 18 வயது இளைஞர் உள்பட 3 பேரை மகளிர் போலீசார் பிடித்தனர். மீட்கப்பட்ட 2 அழகிகளையும் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன், ஜெகன் உள்பட 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த ராஜா என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து உதவி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.