செய்திகள்
விசைப்படகு

புயல் சின்னம் எதிரொலி: தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2020-12-01 08:20 GMT   |   Update On 2020-12-01 08:20 GMT
வங்க கடலில் மீண்டும் புயல் சின்னம் எதிரொலியால் தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்க மறுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 4,500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 144 விசைப்படகுகளும் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களிலும், பிற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு நிவர் புயல் காரணமாக 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புயல் கரையை கடந்த பின்பு கடந்த 28-ந்தேதி மட்டும் கடலுக்கு சென்றனர்.

இந்தநிலையில் மீண்டும் வங்க கடலில் உருவான புயல் சின்னம் எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் நாட்டுப்படகு மீனவர்களும், நேற்று கடலுக்கு செல்லவேண்டிய விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வள துறையினர் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 144 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்தும், வருமானம் இழந்தும் தவித்து வருகின்றனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
Tags:    

Similar News