செய்திகள்
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கலூர்:
பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூர், சக்தி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). பல்லடத்தை சேர்ந்தவர் சதீஷ் (19). இவர்கள் இருவரும் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் கரையாம்புதூரில் இருந்து மகாலட்சுமி நகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சதீஷ் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.