செய்திகள்
கோப்பு படம்

வலங்கைமானில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-11-30 14:19 GMT   |   Update On 2020-11-30 14:19 GMT
வலங்கைமானில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீத்துகாரதெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி சங்கீதா (வயது38). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வலங்கைமான் கடைதெருவிற்கு ஸ்கூட்டரில் கும்பகோணம் ரோட்டில் பள்ளிவாசல் அருகே வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த 2 மர்ம நபர்கள், சங்கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். அப்போது அவர் சங்கிலியை பிடித்து கொண்டதால் ஒரு பாதி சங்கிலி சங்கீதா கையிலும், மற்றொரு பாதி கீழேயும் விழுந்துள்ளது. சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு மக்கள் வந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். 

இதேபோல சந்திரசேகரபுரம் பூண்டி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மனைவி கலாவதி (58) என்பவர் ஸ்கூட்டரில் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வீட்டு திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் வலங்கைமான் கடைத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது கலாவதியிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் தான் சங்கீதாவிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வலங்கைமானில் ஒரே நாளில் 2 சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News