செய்திகள்
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாடு குறுக்கே பாய்ந்ததால் என்ஜினீயர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே மாத்தார் செம்பிராவிளையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அபிசோன் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அழகியமண்டபத்தில் ஹெல்மெட் கடை வைத்து நடத்தி வந்தார்.
தினமும் காலை அபிசோன் தனது மோட்டார் சைக்கிளில் கடையை திறக்க அழகியமண்டபத்துக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று காலையும் கடைக்கு செல்வதற்காக அபிசோன் மாத்தாரில் இருந்து அழகியமண்டபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூவன்கோடு இலுப்பமூடு பகுதியில் சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்தது. இதைகண்ட அபிசோன் பிரேக் பிடித்துள்ளார்.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டு அபிசோன் படுகாயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிசோன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.