செய்திகள்
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையை சேர்ந்த முருகன் மகன் கதிரேசன் (வயது 13). இவரது உறவினர் பரன்குன்றாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ஹரிஹரசுதன் (10).
பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை சாம்பவர் வடகரை அருகே உள்ள உசிலங்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.
அருகில் நின்றவர்கள் இருவரையும் குளத்தில் இருந்து மீட்டு சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்தபோது, கதிரேசன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் கதிரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிஹரசுதனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.