செய்திகள்
திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜீயபுரம்:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் கிஷோர் (வயது 12). அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் 12 மணி அளவில் அப்பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டிக்கு குளிக்க சென்றான். அவன் மின் மோட்டாரை இயக்கிய போது, அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மின் மோட்டாருக்கான மின் இணைப்பு பெட்டி பராமரிப்பு இன்றி இருந்ததும், அதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. பின்னர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.