செய்திகள்
மழையிலும் களத்தில் துரிதமாக செயலாற்றும் போலீசார், பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
நிவர் புயலையொட்டி மீட்பு பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் உள்பட பல்வேறு முன்கள பணியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.
சென்னை:
நிவர் புயலையொட்டி நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் உள்பட பல்வேறு முன்கள பணியாளர்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவேற்றம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
ஆபத்து காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல்துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிவர் புயல் கரையை கடக்கும் வரை மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வேளச்சேரி-தாம்பரம் சாலையில் நிவர் புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர்.
இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தனிக்கவனம் செலுத்தவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க 3 ஆயிரத்து 344 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.