செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்: விமான நிலையம் மூடல்
சென்னை மெட்ரோ ரெயில் சேவை இரவு 7 மணியோடு நிறுத்தப்படும் நிலையில், சென்னை விமான நிலையமும் மூடப்படுகிறது.
அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிவர் புயல் கரையை கடக்கும் நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்து, புறநகர் ரெயில்சேவை, விரைவு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று விடுமுறை கால அட்டவணையின்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 10 வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருந்தது.
தற்போது மெட்ரோ ரெயில் ஓடிக்கொண்டிருக்கிறது. கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 7 மணியோடு மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை புயல், மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை விமான நிலையம் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.