செய்திகள்
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை
திருச்சியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 38). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வரும் இவர், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டாலின் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் லங்கார பகுதியை சேர்ந்தவர் பாய்ராம் (28), இவருடைய மனைவி நிர்மா. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாய்ராம், ஹரிகிருஷ்ணன் வீட்டின் பீரோவில் இருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மாயமானார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஹரிகிருஷ்ணன் வீட்டில் உள்ள பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் மாயமான பாய்ராம் தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.