செய்திகள்
கோப்புபடம்

பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி பட்டதாரி வாலிபர் தற்கொலை

Published On 2020-11-15 09:47 GMT   |   Update On 2020-11-15 09:47 GMT
மேற்படிப்புக்கு செல்ல முடியாத விரக்தியில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,

அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு செல்ல முடியாத விரக்தியில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தெலுங்கானா மாநிலம் மதுரா நகரை சேர்ந்தவர் ராஜா ரெட்டி. இவரது மகன் சுமந்த் ரெட்டி (வயது 27). பி.டெக் பட்டதாரியான இவர் உயர்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவுக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த சுமந்த் ரெட்டி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு கடந்த 11-ந் தேதி கோவைக்கு வந்தார். பின்னர் அவர் காந்தியுரம் நேரு விதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாக சுமந்த் ரெட்டி தங்கி இருந்த அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் லாட்ஜிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சுமந்த் ரெட்டி அறைக்குள் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி மூச்சு திணறல் செய்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News