செய்திகள்
விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சேலத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

Published On 2020-11-11 15:00 GMT   |   Update On 2020-11-11 15:00 GMT
காவிரி-சரபங்கா நீரேற்றம் திட்டத்தை நீரோடை வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி-சரபங்கா நீரேற்றம் திட்டத்தை நீரோடை வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த திட்டம் தொடர்பான ஆட்சேபனை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்குவதற்காக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து கொண்டு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சிலர் மட்டும் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News