செய்திகள்
கோப்புபடம்

தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2020-11-09 14:51 GMT   |   Update On 2020-11-09 14:51 GMT
தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி குன்னூரை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
கோவை:

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் அஸ்வின்(வயது 28). கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அஸ்வின் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை எடுப்பதற்காக நேற்று மதியம் தனது நண்பர் சிவபிரகாஷ்(20) என்பவருடன் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆத்துப்பாலம் அருகே பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அஸ்வின், சிவபிரகாஷ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்சக்கரம் அஸ்வின் மீது ஏறி இறங்கியது. அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சிவபிரகாஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News