செய்திகள்
புதர் மண்டி கிடக்கும் அமராவதி ஆறு- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதர்மண்டி கிடக்கும் அமராவதி ஆறு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆகிய 2 ஆறுகள் பாய்கிறது. இதனால் கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகள் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை.
மேட்டூர் அணை நிரம்பும் போதுமட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆறு எப்போதும் வறண்டு போய காணப்படுகிறது. இந்நிலையில் கரூர் லைட்ஹவுஸ், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றின் மையப்பகுதிகளில் கரூவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.
கருவேல மரங்களின் வேர்கள் அதிக அளவில் பூமிக்கடியில் ஊடுருவி சென்று. நிலத்தடி நீரை எடுத்து உறிஞ்சி வளரும் தன்மை கொண்டதாகவும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாகவும் உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அதிகபடியான தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொள்வதோடு கடை மடை வரை தண்ணீர் சென்று சேர்வதை தடை செய்யும் வகையில் உள்ளது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் அதற்குள், ஆற்றில் உள்ள கருவேல மரங்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன், வேருடன் பிடுங்கி, ஆற்றை சுத்தம் செய்து கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக நலஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.