செய்திகள்
திருமங்கலம் அருகே வேனில் 77 ரேஷன் அரிசி மூடைகள் கடத்தல் - 3 பேர் கைது
திருமங்கலம் அருகே வேனில் 77 ரேஷன் அரிசி மூடைகள் கடத்திய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வேனில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தி வருவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் கண்டுகுளம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அப்போது வேனில் 77 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து வேன் டிரைவர் மதுரை கீரைதுறையை சேர்ந்த சைவதுறையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசி போத்தம்பட்டியில் இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் தொடர்புடைய கீரைத்துறையைச் சேர்ந்த முனியசாமி (வயது 22), ரவிச்சந்திரன் (26) மற்றும் சைவதுறை ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
வேன் மற்றும் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.