செய்திகள்
சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2020-10-25 03:26 GMT   |   Update On 2020-10-25 03:26 GMT
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வாரவிடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அவர்களில் பலர் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நடந்து சென்றும், பிரையண்ட்பூங்கா, ரோஜா பூங்கா போன்றவற்றில் உள்ள பூக்களை பார்த்தும் ரசித்தனர். மேலும் நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களான மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி, பேத்துப்பாறை அருகே உள்ள ஐந்து வீடு அருவி ஆகியவற்றை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதுபோக்குவதற்காக வனப்பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News