செய்திகள்
விக்கிரமசிங்கபுரம் அருகே ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம்
விக்கிரமசிங்கபுரம் அருகே உணவுப்பொருள் இருப்பு விவரம் சரியாக பராமரிக்காத ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி-மன்னார்கோவில் செல்லும் சாலையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இதையடுத்து அம்பை உணவுப்பொருள் வழங்கல் தாசில்தார் பிரபாகர் அருண்செல்வம் தலைமையில், கூட்டுறவு துணை பதிவாளர் ஆனந்த்ராஜ், வருவாய் ஆய்வாளர் சித்தார்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் இருப்பு கணக்கு விவரம் சரியாக பராமரிக்காத ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் ரூ.67 ஆயிரத்து 10 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அகஸ்தியர்பட்டி ரேஷன் கடை ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.