செய்திகள்
விலை உயர்வால் கடைகளில் வெங்காய பஜ்ஜி, போண்டா நிறுத்தம்
பரமக்குடி பகுதியில் வெங்காயம் விலை உயர்வால் கடைகளில் வெங்காய பஜ்ஜி, போண்டா நிறுத்தப்பட்டுள்ளது.
பரமக்குடி:
கடந்த ஒரு வாரமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பரமக்குடி பகுதியில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குடும்பத்தலைவிகள் சமைக்கும்போது வெங்காயத்தை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடித்து வருகின்றனர்.
இதுதவிர கிராமப்புறங்களில் விதைக்கப்பட்ட வெங்காயம் நன்கு முளைத்து பெரிதாக வருவதற்குள் அவைகளை பிடுங்கி வந்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். மேலும் வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி பகுதிகளில் உள்ள சிற்றுண்டி, பலகார கடைகளில் வெங்காய பஜ்ஜி, வெங்காய போண்டா போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வின் காரணமாக இவைகளை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் வெங்காய பஜ்ஜி, போண்டா வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். மீண்டும் வெங்காய விலை குறைந்தவுடன் அவைகளை விற்பனைக்கு கொண்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.