செய்திகள்
தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமங்கலம்:
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்பட்ட ஊதியத்தை வழங்கவும், நீதியரசர் முருகேசன் தலைமையிலான அறிக்கையை அமல்படுத்தக் கோரியும், ஒருநபர் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், கொரோனா பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம் 11 நாட்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனசேகரன் தலைமையில் செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.