செய்திகள்
வாணியம்பாடி அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆசனம்பட்டு கல்லாபாறை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28), ஆம்புலன்ஸ் டிரைவர். கன்னியாகுமரி மாவட்டம் மணலிகாட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லெஜின்ஆன்ரோ மரியலாசர் (25), மருத்துவ ஆய்வக பரிசோதகர். நண்பர்களான இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றாக வேலைப் பார்த்து வந்தனர்.
நேற்று இரவு பெங்களூருவில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் அருகே வரும்போது, நிலைத்தடுமாறிய மோட்டார்சைக்கிள் மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். லெஜின்ஆன்ரோ மரியலாசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சதீசை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானவரின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.