செய்திகள்
கோட்டக்குப்பம் அருகே 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
கோட்டக்குப்பம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி மாநிலம் குறிச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் மகன் விக்கிராய் (வயது 29), விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியார்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஆனந்த் (35). ரவுடிகளான இவர்கள் மீது கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக விக்கிராய், ஆனந்த் ஆகிய இருவரையும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் விக்கிராய், ஆனந்த் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து விக்கிராய், ஆனந்த் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.