செய்திகள்
பாடாலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
பாடாலூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது 45). விவசாயியான இவர் நேற்று காலை தனது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அங்கு மின் மோட்டாரை இயக்குவதற்காக, அதற்கான இணைப்பில் உள்ள சுவிட்சை போட முயன்றார்.
அவர் சுவிட்சை தொட்டபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின் கசிவால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.