செய்திகள்
கைது

குடவாசல் அருகே மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

Published On 2020-10-06 11:48 GMT   |   Update On 2020-10-06 11:48 GMT
குடவாசல் அருகே மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்டின்(வயது50). இவரது மனைவி லைசாமேரி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது கோபித்து கொண்டு லைசாமேரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தகவல் அறிந்ததும் ஊரில் உள்ளவர்கள் சமாதானம் பேசி அவரை பாஸ்டின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் கணவன்-மனைவி குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பாஸ்டின் இரவு சாப்பாடு கேட்டு உள்ளார். அப்போது லைசாமேரி, அவரது தாய் சலத்மேரி ஆகியோர் சேர்ந்து பாஸ்டினிடம் சண்டை போட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பாஸ்டின் இரும்பு கம்பியால் மனைவி, மாமியார் ஆகியோரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து லைசாமேரி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாஸ்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News