செய்திகள்
வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறியதாக 110 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஓமலூர்:
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரி ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே சேலம் மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார்.
தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சுடலை, மாநில மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை பரப்பு தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் குமாரவேல் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிர் அணி தலைவி துளசி, இளைஞர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர் கணேஷ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜா, சேட்டு, மோகன்ராஜ், வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவோடு ஏந்தியும், ஏர் கலப்பையுடனும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனிடையே ஊரடங்கு உத்தரவு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடசியின் மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட 110 பேர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.