செய்திகள்
தென்காசி அருகே மக்கள் சபை கூட்டம் நடத்திய தி.மு.க.வினர் 20 பேர் மீது வழக்கு
தென்காசி அருகே மக்கள் சபை கூட்டம் நடத்திய தி.மு.க.வினர் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதவவு செய்தனர்.
தென்காசி:
கொரோனா தடுப்பு காரணமாக, காந்தி ஜெயந்தி தினமான நேற்று தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்துவது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தென்காசி அருகே குத்துக்கல்வலசை கிராமத்தில் நேற்று தி.மு.க. சார்பில் மக்கள்சபை கூட்டம் நடந்தது. தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம் தலைமை தாங்கினார். மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், அவைத்தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர்.
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர் சீனித்துரை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கை மீறியும், அனுமதியின்றியும் கூட்டம் நடத்தியதாக தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 20 பேர் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.