செய்திகள்
பெண் ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெண் ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் தொண்டியக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் இயங்கும் ரேஷன் கடையில் விற்பனையாளராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த உலகநாதன், சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பெண் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு காரணமான கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யக்கோரியும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், சி.ஐ.டி.யூ. செயற்குழு உறுப்பினர் செல்வம், வட்ட தலைவர் அருள்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யும் வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படாது என்று தெரிவித்தனர்.