செய்திகள்
கைது

வாசுதேவநல்லூரில் காரில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-10-01 07:55 GMT   |   Update On 2020-10-01 07:55 GMT
வாசுதேவநல்லூரில் வாகன சோதனையின் போது காரில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுனாசிங் உத்தரவின் பேரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று ராயகிரி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் காரில் வந்தனர்.

உடனே காரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் 5 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் இருந்தது. விசாரணையில் சட்டத்திற்கு விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் சிவகிரி பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(வயது 42), சுரேஷ்(25) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News