உடன்குடியில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள பிள்ளையார் பெரியவன் தட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது43). இவர் திருச்செந்தூர் தாலுகா, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக வேலை பார்த்து வந்தார்.
நேற்றிரவு 11 மணிக்கு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய செல்வமுருகன் தனது மனைவியிடம் பஜாருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்நிலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அருணா உறவினர் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். இதற்கிடையே இன்று காலை உடன்குடி-செட்டியாபத்து சாலையில் குவளையன் கூண்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் செல்வமுருகன் இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே மோட்டார் சைக்கிள் மற்றும் விஷ பாட்டில் கிடந்தது.இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குலசேகரப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹர்சத் சிங் விரைந்து வந்து செல்வமுருகன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றார்.
தற்கொலை செய்த செல்வமுருகனுக்கு அருணா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.