செய்திகள்
உயிரிழப்பு

பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

Published On 2020-09-29 01:49 GMT   |   Update On 2020-09-29 01:49 GMT
பொன்னேரி அருகே கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் வசிப்பவர் தாஸ் (வயது 40). இவரது மகன் நரேன் (14). இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நரேன் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அவன் விட்ட காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி கொண்டது. இதையடுத்து நரேன் காற்றாடியை எடுப்பதற்காக கம்பு ஒன்றை எடுத்து மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடி எடுக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.

இதைக்கண்ட அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் நரேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News