செய்திகள்
கோப்புபடம்

கட்டிட மேஸ்திரி மின்சாரம் தாக்கி பலி

Published On 2020-09-28 07:17 GMT   |   Update On 2020-09-28 07:17 GMT
பென்னாகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்ற கட்டிட மேஸ்திரி மின்சாரம் தாக்கி இறந்தார்.
பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர் ஊராட்சி ஜங்கமையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சிக்கி என்கிற மனைவியும், முனிரத்தினம், ராஜேஷ் ஆகிய 2 மகன்களும், பரிமளா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஜங்கமையனூர் வழியாக முனிராஜ் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் மேற்கூரை மோதி மின்கம்பி அறுந்து சாலையில் கீழே விழுந்து கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முனிராஜ் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உயிர் பலி ஏற்படாமல் இருக்க அவர் அறுந்து கிடந்த மின்கம்பியை சாலையின் ஒதுக்குபுறம் அப்புறப்படுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மரக்கட்டை மூலம் கம்பியை தட்டி விட்டனர். பின்னர் அவர்கள் பலத்த காயம் அடைந்த முனிராஜை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது முனிராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News