செய்திகள்
சென்னை மாநகராட்சி

கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.1 சதவீதம் அதிகரிப்பு

Published On 2020-09-28 03:23 GMT   |   Update On 2020-09-28 03:23 GMT
சென்னையில் கடந்த 7 நாட்களில் 0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக 950 முதல் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

7 நாட்களுக்கு ஒருமுறை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று எந்த வகையில் பரவி உள்ளது என்ற தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிடும். அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள தகவல் படி சென்னையில் கடந்த 7 நாட்களில் 0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் 6.3 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3.7 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.4 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், பெருங்குடியில் 1.8 சதவீதமும், ராயபுரத்தில் 0.9 சதவீதமும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 0.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலத்தில் தலா 0.1 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.2 சதவீதமும், அடையாறு மண்டலத்தில் 0.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 0.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 1.3 சதவீதமும், திருவொற்றியூர் மண்டலத்தில் 2 தவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 6.8 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 60.21 சதவீதம் பேர் ஆண்கள், 39.79 சதவீதம் பேர் பெண்கள். மேலும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.05 சதவீதமும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 5.92 சதவீதமும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.74 சதவீதமும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 18.70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.72 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.50 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.69 சதவீதமும், 70 முதல் 79 வயதினர் 5.53 சதவீதமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.15 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News