செய்திகள்
ஜே.இ.இ. ‘அட்வான்ஸ்டு’ தேர்வு: நாடு முழுவதும் 1,000 மையங்களில் இன்று நடக்கிறது
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. ‘அட்வான்ஸ்டு’ தேர்வு, நாடு முழுவதும் 1,000 மையங்களில் இன்று நடக்கிறது.
சென்னை:
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள். இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அதன்படி, இந்த தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
நாடு முழுவதும் 222 நகரங்களில் 1,000 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காலையில் தாள்-1 தேர்வும், பிற்பகலில் தாள்-2 தேர்வும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை டெல்லி ஐ.ஐ.டி. நடத்த இருக்கிறது.