செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று வேலம்பாளையம் காட்டுப்பகுதியில் புறா பிடிக்க கிருஷ்ணன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்த கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.