செய்திகள்
கோப்புபடம்

குடிபோதையில் தகராறு: தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2020-09-24 08:57 GMT   |   Update On 2020-09-24 08:57 GMT
சூலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவையை அடுத்த சூலூர் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சக்திவேல் (வயது18). கட்டிட தொழிலாளி. இவர் பட்டணம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடுப்பாளையத்தை சேர்ந்த ராஜமோகன் (26) தனது நண்பருடன் குடிபோதையில் வந்தார். 

முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதமாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் திடீரென்று சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜமோகன், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு சக்திவேலின் வலது கை பகுதியில் ஓங்கி குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த சக்திவேல் அலறி துடித்தார். உடனே அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கத்தியால் குத்திய ராஜமோகனை மட்டும் கைது செய்தனர்.
Tags:    

Similar News