செய்திகள்
போடி அருகே ‘லிப்ட்’டில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
போடி அருகே தனியார் காபி ஆலையில் ‘லிப்ட்’டில் இருந்து தவறி விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி:
போடி அருகே உள்ள வாழையாத்துபட்டியை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர், தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் உள்ள தனியார் காபி ஆலையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அந்த ஆலையில் உள்ள ‘லிப்ட்’ பழுதானது. இதனால் முருகராஜூவும், பெரியகுளத்தை சேர்ந்த மற்றொரு மெக்கானிக்கான ஹரிஷ் முகமது (45) என்பவரும் சேர்ந்து ‘லிப்ட்’ பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.
இதற்காக அவர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து, சுமார் 40 அடி உயரத்தில் நின்றவாறு ‘லிப்ட்’டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பெல்ட் திடீரென்று அறுந்தது. இதனால் முருகராஜூவும், ஹரிஷ் முகமதுவும் நிலை தடுமாறி ‘லிப்ட்’டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரையும், ஆலை தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகராஜ் இறந்தார். ஹரிஷ் முகமதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.