செய்திகள்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
சென்னையை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவருடைய மகன் கிறிஸ்டோபர்(வயது 29). தனியார் நிறுவன ஊழியரான இவர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று அணைக்காடு மெயின் ரோட்டில் உள்ள செட்டிகுளத்தில் கிறிஸ்டோபர் குளிக்க சென்றார். அந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் இல்லாத நிலையில் அவர் குளத்தின் நடுவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வெட்டியிருந்த பள்ளத்தில் கிடந்த நீரில் குளிப்பதற்காக இறங்கினார். இதில் அவர் சேற்றில் சிக்கி குளத்தில் மூழ்கினார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு கரைக்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வராஜ், தீயணைப்பு படை வீரர்களுடன் அங்கு சென்று கிறிஸ்டோபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.