செய்திகள்
முறையாக குடிநீர் வழங்க வேண்டும் - மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு
திருப்பூர்-காங்கேயம் ரோடு பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு தொகுதி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம், எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள கோம்பை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குடிநீர் முறையாக வழங்க வேண்டும். இதுபோல் குடிநீர் வழங்கும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
தற்போது மழை பெய்து வருவதால், அந்த பகுதிகளில் சாக்கடை கால்வாயில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதனையும் சரி செய்ய வேண்டும். தெருநாய்கள் அதிகமாக உள்ளதால், குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். எனவே நாய்களை பிடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதில் தெற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.