செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

துறையூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2020-09-12 11:02 GMT   |   Update On 2020-09-12 11:02 GMT
குடிநீர் கேட்டு பொது மக்கள் திருச்சி- துறையூர் மெயின்ரோட்டில் காளிப்பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துறையூர்:

துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ்நகரில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அனைவருக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை எனவும், பலர்நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரியும், வீட்டுக்கு தனி குடிநீர் இணைப்பு கேட்டும்அதிகாரிகளி டம் பொது மக்கள்மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொது மக்கள் மற்றும் பெண்கள் திருச்சி- துறையூர் மெயின்ரோட்டில் காளிப்பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுப்பட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிகூறினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறையூர் - திருச்சி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News