செய்திகள்
கோப்புபடம்

கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மத போதகர் கைது

Published On 2020-09-07 09:50 GMT   |   Update On 2020-09-07 09:50 GMT
கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மத போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முடியக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் அசோக் ஸ்டீபன்(வயது 59). கிறிஸ்தவ மத போதகர். அதே பகுதியில் ‘பெதஸ்தா’ என்ற சபையை நடத்தி வந்தார். இவர் தனது சபைக்கு வரும் பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அசோக் ஸ்டீபன் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், மத போதகர் அசோக் ஸ்டீபன் மீது கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘மத போதகர் அசோக் ஸ்டீபன் முன்விரோதம் காரணமாக எனது கார் கண்ணாடியை உடைத்தார்.

வீட்டுக்குள் புகுந்து என்னை கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அசோக் ஸ்டீபன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அப்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு இந்து அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். மேலும் மத போதகர் அசோக் ஸ்டீபன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர். கைது செய்யப்பட்ட மத போதகரை குன்னூர் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News