நடையனூரில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் இளங்கோ நகர் வீதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் வீதி முழுவதும் மண்ணுடன் ஜல்லி கலந்து போடப்பட்டது. பின்னர் சாலை ஓர நெடுகிலும் குழி தோண்டப்பட்டு குழாய் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழி மூடப்பட்டது. இதனால் சாலை பழுது அடைந்த நிலையில் அப்படியே உள்ளது . கற்களும் மண்ணும் கலந்து கிடைக்கிறது.
நீண்ட நாட்களாகியும் கான் கிரீட் சாலையாக மாற்றப்படாததால் மழையால் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிப்பவர்கள் தினசரி சேற்றில் நடந்து சென்று அவதியுற்று வருகின்றனர். இது குறித்து உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேறும் சகதியுமாக உள்ள சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.