பெரியபட்டினம் அருகே சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி குருத்தமண்குண்டு மீனவ கிராமத்தில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் முழு நேர தொழில் கடலில் மீன் பிடிப்பது ஆகும். அந்த கிராமத்தில் இருந்து அன்றாட தேவைகளுக்காக பெரியபட்டினம் செல்வதற்கும், தொழிலுக்காக தெற்கு புதுக்குடியிருப்பு கடற்கரைக்கு செல்வதற்கும், மாணவ- மாணவிகள் படிப்பதற்கும் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுத்து திருப்புல்லாணி யூனியன் கவுன்சிலர் பைரோஸ்கான் கூறியதாவது:-
மழை காலங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை 5 அடிக்கு மேல் உள்ள தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மாணவ- மாணவிகளை மழை காலங்களில் பெற்றோர் தூக்கிக்கொண்டு தண்ணீரில் நீந்தி, சாலையில் விட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அரசு உயர் அலுவலர்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும், பலன் இல்லை. எனவே பெரியபட்டினம் தெற்கு புதுகுடியிருப்பு சாலையில் இருந்து குருத்தமண்குண்டு கிராமத்திற்கு தனியாரிடம் இருந்து இடத்தை பெற்று பாலத்துடன் கூடிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.