செய்திகள்
கைது

கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது

Published On 2020-09-04 06:49 GMT   |   Update On 2020-09-04 06:49 GMT
கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை மதுக்கரை அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 20). பெயிண்டர்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியும் தமிழ்செல்வனும் நண்பராக பழகி வந்தனர். ஆனால் தமிழ்செல்வன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். அவர் மாணவியை அடிக்கடி சந்தித்து தன்னை காதலிக்கும்படி கூறி வந்தார். ஆனால் மாணவி தொடர்ந்து மறுத்து வந்தார்.

சம்பவத்தன்று தமிழ்செல்வன் மாணவியை சந்தித்தார். பின்னர் தன்னை காதலிக்கும் படி மீண்டும் கூறினார். ஆனால் மாணவி காதலிக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை தாக்கினார். காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

தமிழ்செல்வன் தாக்கியதில் காயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து மாணவியின் தாய் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கி மிரட்டிய தமிழ்செல்வனை கைது செய்தார். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News