செய்திகள்
மருந்து விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 2 பேர் கைது
மருந்து விற்பனை பிரதிநிதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்மலை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மோதிலால் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் பொன்மலை அருகே பாலாஜி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். பின்னர் அவர் தனது வாகனம் அருகே வந்தபோது, அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலாஜி வைத்திருந்த ரூ.6 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றையும், தனியார் வங்கி கிரெடிட் கார்டுகளையும் பறித்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இதுபற்றி பாலாஜி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பாலாஜியிடம் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றது, பாலக்கரை ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்(19) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வினோத் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.