செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 35). இவர் எண்ணூரில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வெங்கடேசனுக்கும், ஆந்திர மாநிலம் சத்யவேடு அடுத்த தாஸ் குப்பம் கிராமத்தை சேர்ந்த குமுதாவிற்கும் (30) திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது இளம்பெண் குமுதா, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குமுதா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து குமுதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.