திருச்சி செந்தண்ணீர்புரத்தில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
திருச்சி:
திருச்சி செந்தண்ணீர் புரத்தில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்றிரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
இன்று காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலுக்குள் உள்ள மற்றொரு சிறிய கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பரணி தரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகமல் இருப்பதற்காக கேமராவை உடைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். உண்டியல் பணம் எவ்வளவு கொள்ளை போயுள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.