செய்திகள்
சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
வாணியம்பாடி அருகே சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
வாணியம்பாடி:
அரக்கோணத்தில் இருந்து சிமெண்டு கலவையை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி ஒரு லாரி வாணியம்பாடி-நாட்டறம்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தது. நெக்குந்தி மேம்பாலத்தில் லாரி சென்றபோது, அதன் டிரைவர் செல்போன் பேசியபடி லாரியை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென நிலைத்தடுமாறி தடுப்பு இரும்புக்கம்பி மீது மோதி சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது அந்த வழியாக எதிரே வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, விபத்துக்கு பயந்து தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு வெகுதூரம் ஓடி விட்டனர். விபத்துக்குள்ளான கலவை பார லாரியை விட்டு விட்டு அதன் டிரைவரும் தப்பியோடி விட்டார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய கலவை பார லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.